tamilnadu

img

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கடன் திட்டம்

கல்விக்கான கடன் உத்தரவாத நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கல்விக் கடனில் பயன் பெற்றவர்களில் 70 சதவீதம் ‘உயர் சாதி’யை சார்ந்த மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அளித்த தகவல் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்க மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார், மற்றும் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு.

மாணவர்களின் கல்வி கடன் திட்டத்தின் கீழ் 2016 யில் இருந்து 2019 வரை 4.1 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் பெற்றுள்ளனர். இதில் 67 சதவீதம் பொது பிரிவு மாணவர்கள், 23 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 7 சதவீதம் பட்டியல் சாதி மாணவர்கள் மற்றும் 3 சதவீதம் பழங்குடியின மாணவர்கள். சதவீதத்தில் மட்டும் அல்ல, பெற்ற கடன் தொகையிலும் கூட சமூக ஏற்றத்தாழ்வு பிரதிபலிக்கிறது.  அதேபோல நிதி அமைச்சர் மக்களவையில் கூறிய தகவலின் அடிப்படையில் மத்திய அரசின் வட்டி மானியத் திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கல்விக் கடனிலும்  அதிக பயன் பெற்றவர்கள் பொது பிரிவை சார்ந்த மாணவர்களே. பொதுப் பிரிவில் 2015-16 ஆண்டில் 45 சதமாக இருந்த பயனாளிகள் 2018-19-ல் 57 சதமாகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் 2015-16 ஆண்டில் 28.75 சதமாக இருந்த பயனாளிகள் 39.27 சதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் 2015-16 யில் 7.18 சதமாக இருந்த பட்டியல் சாதி பிரிவினர் 2018-19 யில் 3.04 சதமாகவும், பழங்குடியினர் 2.28 சதவீதத்தில் இருந்து 0.65 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் கல்விக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு என குறிப்பிட்டு தரப்படுகிற மத்திய அரசு வட்டி மானியத் திட்டம் ஆகிய திட்டங்களில் அதிக அளவில் பயன் பெறுவது சமூக ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர் என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. மாணவர்கள் படிப்பதற்காக பெறப்படும் கல்விக் கடனில் கூட சாதிய ஏற்றத்தாழ்வு பிரதிபலிக்கிறது என்றால் 72 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் சமூக நீதி எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கிறது என உணர முடிகிறது. எந்த ஒரு சாதிய பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டுமே தவிர, சாதிய ஏற்றத்தாழ்வு பிரதிபலிப்பதை பார்க்கும் போது இதுபோன்ற திட்டங்களுக்கு எந்த கவனமும் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி செலுத்துவது இல்லை என்பது திட்டவட்டமாகக் தெரிகிறது. அனைத்து மட்டத்திலும் கல்விக்கடன் பற்றிய முழு விவரங்களையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும். சாதி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கடன் சென்றடைய உடனடியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளனர்.